குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
தவெக அரசைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தவெக அரசைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பெண்கள் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாமல், போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறியதாகவும், குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 18 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; போதைப் பொருட்கள் தங்குதடையின்றி புழக்கம்; சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால், கடந்த விடியா திமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் பரிதவித்தனர்.
இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தாடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.
அண்மையில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் த.வெ.க. அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 சனிக் கிழமை காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பெண்கள் நலனையும், மக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Protest against TVK government for promoting horse trading: Edappadi Palaniswami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.