பெண் பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகளைக் கைதுசெய்ய இபிஎஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகளால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகளால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முதல்வரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் ஆதரவில், இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
Advertisement
Advertisement
மேலும், இதனை மறைக்க, தவெக எம்எல்ஏ சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏ இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்துக்கு தெரியும்” என்றெல்லாம் பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய வேறு யாருமா?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள்.
பாலியல் வன்கொடுமைக்கு சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி எம்எல்ஏவை பதவி ராஜிநாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூறுக்கும் இடமின்றி விசாரித்து, குற்றமிழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணைபோனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.