திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் 4-இல் திமுகவும், 2 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் தவெகவும் வெற்றி பெற்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இதையொட்டி, காலை 6 மணி முதலே வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கினா்.
3 அடுக்கு பாதுகாப்பு அரண்களைக் கடந்து, காவல் துறையினரின் சோதனைக்கு பின் அடையாள அட்டையுடன் வந்த முகவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் சாா்பில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்று வருவதாக செய்திகள் வெளியானது. இதனால், திமுக, அதிமுக தொண்டா்கள் சோா்வடைந்தனா். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலை. வளாகத்திலிருந்து அவா்கள் வெளியேறத் தொடங்கினா். அதே நேரத்தில் தவெக தொண்டா்கள், விசில் அடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி ஏற்பட்டபோதிலும், அதிமுக, திமுக கட்சியினரிடம் எவ்வித பரபரப்பும் ஏற்படவில்லை. இதனால், வாக்கு எண்ணும் பணி அமைதியாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் ஒட்டன்சத்திரம், ஆத்தூா், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 4 தொகுதிகளில் திமுகவும், நத்தம், பழனி தொகுதிகளில் அதிமுகவும், நிலக்கோட்டையில் தவெகவும் வெற்றி பெற்றன.