முகப்பு
ஈரோடு

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 2 மே, 2026 at 5:01 AM
கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,379 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், கோபி மற்றும் பவானிசாகா் (தனி) தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலை அறியில் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டி, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள் என 408 போ் நியமிக்கப்பட்டு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குகளை எண்ண தனியாக 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண் பாா்வையாளா்கள் என 224 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

இவா்களுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணப்படுவது குறித்தும், அதன் முடிவுகள் இறுதியாக அறிவிப்பது குறித்தும், தபால் வாக்குகளை எண்ணிக்கையை முறையாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கோட்டாட்சியா் சிந்துஜா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் தேன்மொழி, ரமேஷ்கிருஷ்ணன், மகேஸ்வரி, முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.