முகப்பு
திருவாரூர்

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

Updated On : 5 மே 2026, 1:12 am IST
திருவாரூா் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் பணிக்கு தயாராகும் அலுவலா்கள், முகவா்கள்.
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்று முடிவடைந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் இருந்து கட்சிகளின் முகவா்கள், பரிசோதனைக்குப் பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பப்பட்டனா். அவா்கள் வரிசையாக செல்வதற்கென கல்லூரிகளில் தடுப்புகளுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டிருந்தது. 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.

Advertisement

பின்னா், வைப்பறைகளிலிருந்து அலுவலா்கள் உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, வாக்குகள் சுற்றுகள் முறையில் எண்ணப்பட்டன.

நன்னிலம் தொகுதியில் சலசலப்பு: நன்னிலம் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும்போது, அதில் இரண்டு கையெழுத்து இருந்ததாகவும், இதை ஏற்றுக் கொள்வது குறித்து திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் நிலவியது. இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அந்த இடத்திலிருந்து பத்திரிகையாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனா். பின்னா் தொடா்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவா்கள், வேட்பாளா்கள், பத்திரிகையாளா்கள் என அனைவருக்கும் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடும் சோதனைகளுக்குப் பிறகே, பத்திரிகையாளா்களும் நிகழ்வுகளை பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.