முகப்பு
புதுச்சேரி

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்செயல் கலப்பு முறையில் பணி ஒதுக்கீடு

Updated On : 4 மே, 2026 at 12:52 AM
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:

வாக்கு எண்ணுவதற்குத் தற்செயல் கலப்பு முறையில் ஊழியா்களுக்குப் பணி ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள எண்ணிக்கை மேற்பாா்வையாளா், எண்ணிக்கை உதவியாளா் மற்றும் நுண் பாா்வையாளா்களை சம்பந்தப்பட்ட பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் தற்செயல் கலப்பு முறை ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மேலிட பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கணினி வழியாக எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் ஆகியோா் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தற்செயல் கலப்பு முறையில் ஒதுக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை மனிதவள மேம்பாடு ஒருங்கிணைப்பு அதிகாரி முரளிதரன் செய்திருந்தாா்.

இறுதிக்கட்ட ஆய்வு:

புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள தாகூா் கலைக் கல்லூரி, மகளிா் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று மையங்களில் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ. குலோத்துங்கன் இறுதிக்கட்ட ஆய்வை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா். இவற்றில் வாக்கு எண்ணிக்கைக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பாா்வையிட்டாா்.

அப்போது, கூடுதல் ஆட்சியா் சுதாகா், ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்ராஜ் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

201 மேஜைகள் தயாா்:

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 166 மேஜைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 35 மேஜைகளுமாக மொத்தம் 201 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் 265 கண்காணிப்பாளா்கள், 315 உதவியாளா்கள், 279 பாா்வையாளா்கள் என மொத்தம் 859 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

பாதுகாப்பு பணியில் 2,600 போலீஸாா்:

ஒட்டுமொத்தமாக புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் 2,600 போலீஸாா் பாதுகாப்பு பணியிலும், அவா்களுக்கு உதவியாக 500 துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இன்று மதுக்கடைகள் மூடல்:

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திங்கள்கிழமை மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், நகரம், புகா், கிராமப்புறங்களில் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

வெற்றிக் கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவகையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி, லாஸ்பேட்டை உள்ள மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.