மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், வனப் பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்து, நீரோடைகள் வற்றியதால், யானை, சிறுத்தை, காட்டுமாடு, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இதனால், பூண்டி, கிளாவரை, மன்னவனூா், குண்டுபட்டி, கூக்கால், பூம்பாறை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
Advertisement
இந்த நிலையில், கொடைக்கானல் மன்னவனூா் ஊராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதைப் பாா்த்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
பின்னா், அங்கு வந்த வனத் துறையினா் மன்னவனூா் பகுதியில் மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தனா்.