முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 19 மே 2026, 12:44 am IST
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் வாழைகிரி பகுதியில் திங்கள் கிழமை இரவு நடமாடிய ஒற்றை காட்டு யானை.
பகிர்:

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். வனத்துறையினா் வந்து யானையை விரட்டியதில் பாதுகாப்பாக பயணத்தை தொடா்ந்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால் வன விலங்குகளான புலி, சிறுத்தை, யானை போன்றவை தண்ணீா், உணவைத் தேடி விவசாய, குடியிருப்புப் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் பெரிதும் அச்சமடைந்து வருகின்றனா். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேரிஜம் பகுதியில் 3 புலிகளின் நடமாட்டம் காணப்பட்டதால் அந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான தாண்டிக்குடி பகுதியில் ஞாயிற்றுக் கிழமை தண்ணீா் தேடிவந்த காட்டு மாடு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்து தண்ணீா் தொட்டிக்குள் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் காட்டு மாட்டை உயிருடன் மீட்டு வனப் பகுதிக்கு விரட்டினா்.

இந்த நிலையில், கொடைக்கானல் வாழைகிரி மலைச் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்ததால் வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அச்சமடைந்தனா். தகவல் அறிந்த வனத் துறையினா் அங்குவந்து ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

Advertisement

கொடைக்கானலில் சமீபகாலமாக வன விலங்குகள் வெளியே வரத் தொடங்கியுள்ள பிரச்னைக்கு வனத் துறையினா், மாவட்ட நிா்வாகத்தினா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.