மதுரையில் நாளை தனிமனை வரன்முறை சிறப்பு முகாம்: ஆணையர் அனீஷ்சேகர்
மதுரையில் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் ஜூலை 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமதியற்ற மனைப் பிரிவுகளின்
மதுரையில் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் ஜூலை 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் தனிமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 100 வார்டுகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவினை வரன்முறைப்படுத்தும் வகையில், சிறப்பு முகாம் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று சம்பந்தப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்தும் தொகையை செலுத்துவதற்கான உத்தரவுகளையும், வரன்முறைப்படுத்தியதற்கான உத்தரவுகளையும் பெறலாம்.
முகாமுக்கு வரும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பத்திர நகல்கள், இணையதள கட்டணம் ரூ.500, வில்லங்கச் சான்று ஆகிய அனைத்தும் அடங்கிய கோப்புகள் இரண்டும், மேலும் சம்பந்தப்பட்ட மனைப் பிரிவுக்கான வரைபட நகல்கள் (லே-அவுட்) ஐந்தும் கொண்டுவரவேண்டும். சரியான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
முகாமில் சம்பந்தப்பட்ட மனைக்கான தொகையை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது மனைக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 என கட்டணம் செலுத்தவேண்டும். முகாம் அன்றே கட்டணம் செலுத்துவோருக்கு வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கப்படும்.
வருங்காலங்களில் வரன்முறைப்படுத்தாத மனைகளுக்கு மாநகராட்சியால் கட்டட வரைபட அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே, இந்த முகாமைப் பயன்படுத்தி, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் உரிமையாளர்கள் தனிமனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.