மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கோரி மனு
மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கோரிய மனுவை பிப். 28க்குள் பரிசீலித்து
மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கோரிய மனுவை பிப். 28க்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக சிறைத் துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு: நான் மதுரை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ளேன். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். என் போன்று சிறையில் உள்ளவர்களுக்கு தொலைக்காட்சி செய்தி பார்ப்பதுதான் ஒரே பொழுதுபோக்கு.
இந்நிலையில், மதுரை மந்திய சிறையில் காலாவதியான பழைய முறையில் ஆண்டனா முறையில்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனால் எனது தாய்மொழியான தமிழ் மொழியில் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. எனவே, பிற சிறைகளில் உள்ளதுபோல் மதுரை மத்திய சிறையிலும் டிஜிட்டல் முறையில் பொதிகை உள்ளிட்ட தமிழ் சேனல்கள் ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை பிப். 28-க்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சிறைத் துறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.