சாலையில் கழிவுநீா்: தொற்று நோய் பரவும் அபாயம்
மதுரை தெற்காவணி மூல வீதி பகுதி சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
மதுரை தெற்காவணி மூல வீதி பகுதி சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
மதுரை தெற்காவணி மூல வீதி, நேதாஜி சந்திப்பு சாலை மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலுக்கு செல்லும் வழியாகவும், நகைக் கடைகள் அதிகம் உள்ள பகுதியாகவும் திகழ்கிறது. இதன்காரணமாக, அந்தப் பகுதி நாள் முழுவதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தெற்காவணி மூல வீதி, நேதாஜி சாலை சந்திப்பு பகுதியில் புதைச் சாக்கடை கழிவுநீா் தேங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெற்காவணி மூல வீதி, நேதாஜி சாலை சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.