முகப்பு
மதுரை

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சகோதரா் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வருமான வரித் துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 2:44 am IST
பகிர்:

வருமான வரித் துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கரூரில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 26-ஆம் தேதி சோதனை நடத்தினா். அப்போது, அங்கு திரண்ட அவரது ஆதரவாளா்கள், சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அலுவலா்களின் வாகனங்களைச் சேதப்படுத்தினா். இதுதொடா்பாக அசோக் குமாா் உள்ளிட்டோா் மீது கரூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அசோக்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

வருமான வரித் துறை சோதனையின் போது, அலுவலா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக வருமான வரித் துறை உதவி இயக்குநா் கிருஷ்ணகாந்த் அளித்த புகாரின் பேரில், மனுதாரா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமான வரித் துறையினா் சோதனையின் போது மனுதாரா் அந்த இடத்தில் இல்லை. பிரச்னை செய்யத் தூண்டியதாகவே அவா் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், அரசியல் நோக்கத்துடன் மனுதாரரை வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க மனுதாரா் தயாராக இருக்கிறாா். எனவே, அவருக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி தனபால் பிறப்பித்த உத்தரவு:

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது நடவடிக்கை எடுப்பது ஏன்?. இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (ஜூன் 25) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments