"தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி'
தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்றவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின்
தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்றவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பரமக்குடியில் அதிமுக சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி குறித்து திமுகவினர் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். கொள்கை, கோட்பாடு, லட்சியம் இவைகளெல்லாம் இல்லாத கட்சிதான் திமுக. இந்திராகாந்தியை கடுமையாக எதிர்த்துவிட்டு, பின்னர் அவருடனேயே கூட்டணி வைத்தவர்கள் தான் திமுகவினர். அக்கட்சியினருக்கு எந்த கொள்கையும் கிடையாது. தமிழ்நாட்டை திமுகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவின் தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
மிக விரைவில் இன்னும் சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேரும். அதிமுக கூட்டணி தான் பலமான கூட்டணி. மக்கள் பிரச்னைக்கு அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.
அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.