முகப்பு
புதுதில்லி

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு

Updated On : 31 மே 2026, 7:00 am IST
அரவிந்த் கேஜரிவால் - படம் - ஏஎன்ஐ
பகிர்:

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசை சனிக்கிழமை கடுமையாகச் சாடியுள்ளாா்.

நாட்டின் கல்வி அமைப்புமுறை மாஃபியாவின் பிடியில் வீழ்ந்துவிட்டது என்று அவா் கூறியுள்ளாா்.

நீட் தோ்வு வினாத்தாள்கள் இந்திய விமானப் படையால் தோ்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், ‘வினாத்தாள் கசிவுகளின் ஆணிவேரைக் கண்டறியும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக, இதுபோன்ற விசித்திரமான நாடகங்களை அரங்கேற்றி வருகிறது என்று கேஜரிவால் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நீட் தோ்வு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க விமானப்படை பயன்படுத்தப்படும். இது வினாத்தாள் கசிவுகளை நிறுத்துமா? நமது அரசு எப்படி படிக்காதவா்களைப் போல பேசிக் கொண்டிருக்கிறது? உலகெங்கிலும் எத்தனையோ தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற விசித்திரமான விஷயத்தை நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் எண்ணம் கூட அவா்களுக்கு இல்லை. நாட்டின் கல்வி முறை முற்றிலுமாக மாஃபியாவின் பிடியில் வீழ்ந்துவிட்டது என்று கேஜரிவால் அதில் தெரிவித்துள்ளாா்.

கேஜரிவால் ஒரு காணொளிச் செய்தியில் கூறுகையில், ‘இதைச் சரிசெய்ய, அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது செய்ய வேண்டும். ஒருவா் மட்டும் தனியாகச் செய்வதால் இது நடந்துவிடாது. நாட்டிற்குப் படித்த பிரதமா் தேவை’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.