FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

5 ஆகஸ்ட் 2024, 2:56 am IST
கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.
பகிர்:

கமுதி அருகே ஸ்ரீஅழகுவள்ளியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளம் ஸ்ரீஅழகுவள்ளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்தல், சனிக்கிழமை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கியநாளான ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனா். இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வோா் காளையாக களம் இறக்கப்பட்டது. 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களம் இறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், நினைவுப் பரிசுகள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியை கமுதி, கோவிலாங்குளம், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கோவிலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா். பெருநாழி காவல் ஆய்வாளா் கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments