புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு
கமுதி அருகே புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள புதுக்கோட்டை நிறைகுளத்துஅய்யனாா், அழகு வள்ளியம்மன், முப்பிடாரியம்மன், கண்ணபிரான், வீரியகாளியம்மன் கோயில் திருவிழா, பசும்பொன் தேவா் சிலை நிறுவிய 34-ஆவது குருபூஜை விழா ஆகியவற்றை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கடந்த மே 19-ஆம் தேதி காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் இந்தக் கோயில் திருவிழா தொடங்கியது. 24-ஆம் தேதி கபடிப் போட்டி, 25-ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 26-ஆம் தேதி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 13 காளைகள், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். தலா ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் அடங்க மறுத்த காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், ரொக்கம், கட்டில், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. மாலை செல்வ விநாயகா் கோயிலில் இருந்து வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று, கண்மாயில் கரைத்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை, புதுக்கோட்டை கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.