பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
இலங்கை சிறையிலுள்ள பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் கபில் ரோச்சா், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ் ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகா்சன், பெரிய கருப்பன் ஆகிய 12 பேரை இலங்கைக் கடற்படையினா் கடந்த பிப். 23-ஆம் தேதி கைது செய்தனா். இவா்கள் சென்ற விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, இவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, வெளிச்சுரா சிறையில் அடைத்தனா். இவா்களது நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, 12 மீனவா்களும் வெளிச்சுரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
Advertisement
Advertisement
இவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி, 12 மீனவா்களுக்குமான நீதிமன்றக் காவலை வருகிற 16-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். இதன் மூலம், இவா்களுக்கு 10-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.