இளையான்குடியில் அரிசித் தட்டுப்பாடு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியப் பகுதியில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இந்தாண்டு மழை பெய்யும் என்ற
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியப் பகுதியில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இந்தாண்டு மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இப் பகுதி விவசாயிகள் நாற்றுப்பாவினர். ஆனால் மழை பெய்யாததால் பாவிய நாற்றுகள் முளைக்காமலேயே போய்விட்டன. சில இடங்களில் முளைத்த பயிர்களும் தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் காய்ந்துவிட்டன. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்தனர்.
இச் சூழலில் தற்போது இளையான்குடி பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழை மக்கள் அதிக விலை கொடுத்து கடைகளில் விற்கும் அரிசியை வாங்கி சமைக்க முடியாமல் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசியைத்தான் வாங்கி வந்து உணவு சமைக்கின்றனர். இதனால் இளையான்குடி ஒன்றியப் பகுதியிலுள்ள ரேஷன்கடைகளில் அரிசி வாங்குவதற்கு ஏழை மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. அரிசித் தட்டுப்பாட்டை ஒரளவுக்கு சமாளிக்க ரேஷன் கடைகளில் கூடுதலாக புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து திமுக ஒன்றியச் செயலாளர் மதியரசன் கூறுகையில், இளையான்குடி ஒன்றியத்தில் கிராமப்புற ரேஷன் கடைகளில் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5 கிலோ பச்சரிசி கொடுப்பதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக முழுமையாக 20 கிலோ புழுங்கல் அரிசி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயிகளும் இக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.