முகப்பு
சிவகங்கை

பட்டமங்கலத்தில் புரவி எடுப்பு; மஞ்சுவிரட்டு விழா

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை புரவி எடுப்பு திருவிழா மற்றும்  மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:24 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை புரவி எடுப்பு திருவிழா மற்றும்  மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
 பட்டமங்கலம் வடக்குத் தெரு வல்லநாட்டுக் கருப்பர், கரியமலை சாத்தய்யனார் ராவுத்தராயர் ஆகிய சுவாமிகள் கொண்ட கோயில்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு மற்றும் மஞ்சுவிரட்டு விழா நடைபெறுவது வழக்கம்.    அதன்படி, கடந்த தை முதல் நாள் ராவுத்தராயர் கோயில் அருகே சேங்கை வெட்டு என்னும் மண் எடுப்புத் திருவிழா நடைபெற்று அன்று முதல் குதிரை மற்றும் காளைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த தை 20 ஆம் நாள் திருவிழா தொடங்கி, அன்றிலிருந்து விரதம் மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை புரவிகள் பட்டமங்கலம் வடக்குத் தெருவிலிருந்து எடுத்து வரப்பட்டு, ஊர் மந்தையில் வைக்கப்பட்டு இரவு முழுவதும் கும்மியடிப்பு கோலாட்டம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    திருவிழா நாளான ஞாயிற்றுக்கிழமை ஊர் மந்தையிலிருந்து புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் காளைகள் மதழைகள் உள்ளிட்டவற்றை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் சுமந்து கரியமலை சாத்தய்யனார், ராவுத்தராயர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.  இத்திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு விழாவும் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த காளைகள் மற்றும் காளையர்கள் கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் கண்மாய்களிலும், வயல் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. பகல் 1 மணியளவில் தொழுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டு, மஞ்சுவிரட்டு நிறைவுபெற்றது.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் ஊரார்கள் மற்றும் நயினார்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.