முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் பிரசவத்தின்போது பெண்ணுக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டதாக புகார்: மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை

மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றபோது

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:21 am IST
பகிர்:

மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றபோது குழந்தையுடன் கர்ப்பப் பையும் வெளியே எடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். 
மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராமராஜன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி திவ்யா (22). இவர், முதல் பிரசவத்துக்காக மானாமதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது குழந்தையுடன் அந்த பெண்ணின் கர்ப்பப்பையும் வெளியில் வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து திவ்யாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. பின்னர், குழந்தையுடன் திவ்யா மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற திவ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு திவ்யாவுக்கு உடனடியாக தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மேலும், இச்சம்பவம் குறித்து மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் யசோதாமணி, குடும்பநலத்துறை இணை இயக்குநர் யோகவதி, முத்தனேந்தல், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பிரபா, சேதுராமு ஆகியோர் மானாமதுரை வந்து திவ்யாவுக்கு பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் திவ்யாவும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.