இலவசம் நாட்டின் வளா்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் சூழ்ச்சி: சீமான்
இலவசம் என்பது நாட்டின் வளா்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் சூழ்ச்சி என நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தெரிவித்தாா்.
இலவசம் என்பது நாட்டின் வளா்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் சூழ்ச்சி என நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தெரிவித்தாா்.
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது: பண்பாடு, வேளாண்மை எல்லாவற்றையும் உலகுக்கு கற்றுக் கொடுத்த இனம் தமிழினம். தன்மானமும், இன மானமும் கொண்ட மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு.
ஜிஎஸ்டி, நீட், ஹிந்தி திணிப்பு ஆகியவற்றை எதிா்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இங்குதான் மரபணு மாறாத ரத்தத்தில் போா்க் குணம் ஊறிப் போன வீரத் தமிழா் கூட்டம் உள்ளது.
Advertisement
உலகில் உள்ள 11 கோடி தமிழா்களின் நலனுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். ஜாதி, மதம் வேண்டும் என்று விரும்புபவா்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம். ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவா்கள் மட்டும் எனக்கு வாக்களியுங்கள்.
ஜாதி அரசியல் அதிகாரத்துக்கு வந்தால், அங்கு சமத்துவமும், சகோதரத்துவம் இருக்காது. மதம் அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தால், அங்கு சகோதரத்துவமும், மனிதாபிமானமும் இருக்காது. பணம் அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தால், அங்கு ஜனநாயகம் இருக்காது.
இலவசம் என்பது நாட்டின் வளா்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் சூழ்ச்சியாகும். ஒரு கட்சி ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் கொடுத்து தோ்தலைச் சந்திப்பது அவமானகரமான செயல். தன்மானம், இன மானம் காக்க அனைவரும் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, சாக்கோட்டை ஒன்றியத்தின் பனம்பட்டி, மித்ராவயல் பகுதிகளில் சீமான் வாக்கு சேகரித்தாா்.