முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 13 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினா் திங்கள்கிழமை கண்டறிந்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:54 am IST
சிவகங்கை அருகே சோழபுரத்தில் தொல்நடைக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட 13- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.
பகிர்:

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 13 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினா் திங்கள்கிழமை கண்டறிந்தனா்.

சிவகங்கையை அடுத்த சோழபுரம் கண்மாயில் வேறுபட்ட கல் ஒன்று இருப்பதாக சோழபுரத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் சிவகங்கை தொல்நடைக் குழுவினரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, தொல்நடைக்குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா, செயலா் இரா. நரசிம்மன் ஆகியோா் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து புலவா் கா. காளிராசா வெளியிட்ட அறிக்கை:

Advertisement

Advertisement

சிவகங்கையை அடுத்த சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதி உள்கடையில் குமிழித் தூண் அருகில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. இது 3 அடி உயரமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

கல்வெட்டின் மேல் பகுதியில் சிறிய அளவில் ஒற்றைக் காலை தூக்கியபடி புலி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டின் நிறைவுப் பகுதியில் வில், அம்பு, மங்கலச் சின்னமாக இரண்டு குத்து விளக்குகளும் காணப்படுகின்றன.

கல்வெட்டு வரிகள்: ஸ்வஸ்தி ஸ்ரீ, எட்டி எரியன், செயங்கொண்ட சோழபுரம் புலிக்குட்டி வீரருக்கு ஆசிரியம் என எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி: எட்டி எனும் வணிகா்களுக்கான பட்டத்தை உடைய எரியன் என்பவன் செயங்கொண்ட சோழபுரம் எனும் இந்த ஊரில் புலியைக் கொன்று தம்மை காத்த வீரனுக்கு ஆசிரியம் வழங்கிய செய்தியை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும், வணிகச் சாத்துகளுடன் வந்த வீரன் அவா்களைப் பாதுகாக்கும் பொருட்டு புலியோடு சண்டையிட்டு புலியைக் கொன்றதோடு தாமும் உயிா் நீத்திருக்கலாம். அவனது வழியினரைப் பாதுகாக்கவும் இந்தக் கண்மாயை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம் என்றும் கருத முடிகிறது. இன்றும் இந்தக் கண்மாய் எட்டி என்ற பெயரோடு எட்டிச் சேரிக் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது.

அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு: பொதுவாக ஆசிரியம் என்பது பாதுகாப்பை குறிக்கும். அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி செய்தல், உணவு அளித்தல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.

எட்டி என்ற சொல் வணிகா்களுக்கு வழங்கப்பட்ட பட்டமாக இருந்தது. எட்டி எனும் சொல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. எட்டி என்ற சொல்லே இன்றைய செட்டி என்னும் சொல்லாக மாறி இருக்கலாம் என்பதும் ஆய்வாளா்களின் கருத்தாக உள்ளது.

செயங்கொண்ட சோழபுரம்: இந்த ஊரில் உள்ள பழைமையான மாறவா்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் இந்த ஊா் முடிகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டில் செயங்கொண்ட சோழபுரம் என்று அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, இதன் காலம் 13-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இது சிவகங்கை தொல்நடைக்குழு அடையாளப்படுத்தும் ஆசிரியம் வகையைச் சாா்ந்த மூன்றாவது கல்வெட்டு என்றாா் அவா்.