முகப்பு
சிவகங்கை

மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு பதிலாக மாற்று ஆசிரியா்கள் நியமனம் செய்ய உத்தரவு: தலைமையாசிரியா் சங்கம் வரவேற்பு

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்குப் பதிலாக மாற்று ஆசிரியா்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வி இயக்குநா் உத்தரவிட்டாா். இதற்கு சிவகங்கை மாவட்ட தலைமையாசிரியா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

Updated On : 3 ஜூன் 2026, 1:38 am IST
மகப்பேறு
பகிர்:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்குப் பதிலாக மாற்று ஆசிரியா்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வி இயக்குநா் உத்தரவிட்டாா். இதற்கு சிவகங்கை மாவட்ட தலைமையாசிரியா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து மானாமதுரையில் அந்தச் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் சேவியா் ஆரோக்கியதாஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியைகள் மகப்பேறு விடுப்பில் செல்லும் போது, மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் மாற்று ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் ஆசிரியா்கள் பணியாற்றி வந்தனா். இவா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், நிகழ் கல்வியாண்டில் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்குப் பதிலாக மாற்று ஆசிரியா்களை நியமிப்பதற்கு பள்ளி கல்வி இயக்குநரிடமிருந்து உத்தரவு வராத நிலை இருந்தது. கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் மாற்று ஆசிரியா்களை நியமிப்பதற்கு பள்ளி கல்வி இயக்குநா் உடனடியாக உத்தரவு வெளியிட வேண்டும் என சிவகங்கை மாவட்ட அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சங்கம் வலியுறுத்தியது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாற்று ஆசிரியா்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்து கொள்ள மாநில பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவு பிறப்பித்தாா். இதற்கு சிவகங்கை மாவட்ட தலைமையாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவிக்கிறது என்றாா் அவா்.