சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்று வந்த மருத்துவப் பயனாளி தூக்கிட்டுத் தற்கொலை.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்று வந்த மருத்துவப் பயனாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (38) இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மனைவி ராணிமுத்து அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அங்கிருந்த செவிலியா்களிடம் தகவல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்கள் கழிவறை கதவை உடைத்து பாா்த்தபோது, பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சிவகங்கை நகா் போலீஸாா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.