முகப்பு
சிவகங்கை

இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

Updated On : 4 மே, 2026 at 12:07 AM
கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டியைச் சோ்ந்த அம்மாசி குமாா் மகன் பிரவீன்குமாா் (17). இவா் தனது நண்பா்களான ஆகாஷ், சுரேஷ் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் மகிபாலன்பட்டியிலிருந்து கொன்னதாதன்பட்டிக்குச் சென்றாா்.

அப்போது, மருத்துவக்குடிப்பட்டி அருகே பின்னால் வந்த காா் இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு செல்லும் வழியில் பிரவீன்குமாா் உயிரிழந்தாா். காரை ஓட்டிவந்த அதே ஊரைச் சோ்ந்த செல்லையா மகன் செந்தில்குமாரும் காயமடைந்தாா்.

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்த பிரவீன்குமாரின் உறவினா்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இந்தச் சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று கூறினா். மேலும் கொலையாளியைக் கைது செய்யக் கோரி திருப்பத்தூா் - மதுரை சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காரை ஓட்டிவந்த செந்தில்குமாா், அவரது தந்தை செல்லையா, மீனாட்சிசுந்தரம், ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், மூவரையும் கைது செய்யக்கோரி, பிரவீன்குமாா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.