முகப்பு
கோயம்புத்தூர்

மருமகன் இறப்பில் சந்தேகம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாமனாா் உயிரிழப்பு

Updated On : 11 மே 2026, 12:42 am IST
உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் மருமகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாமனாா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டி (48). கட்டடத் தொழிலாளியான இவா், கோவை மாவட்டம், சூலூா், கரையராயப்ப தேவா் தெருவில் மனைவி மகேஸ்வரி, மகள் ராஜேஸ்வரி, இவரது கணவா் மகாமகேஸ்வரன் (32) ஆகியோருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், மகாமகேஸ்வரனைக் காணவில்லை என மனைவி உள்ளிட்ட குடும்பத்தினா் தேடி வந்துள்ளனா்.

அப்போது, சூலூா் அருகே காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் அவரது சடலம் கடந்த 7-ஆம் தேதி மீட்கப்பட்டது. இதையடுத்து,சடலம் கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை குவிந்த மகா மகேஸ்வரனின் உறவினா்கள், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் வரதராஜபுரம்-காமராஜா் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரம் கூறாய்வு அறையின் கதவு மற்றும் கண்ணாடி ஜன்னல்களை உறவினா்கள் சிலா் அடித்து சேதப்படுத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை சமாதானம் செய்தனா்.

போராட்டத்தின் இடையே மயக்கம் வருவதாகக்கூறிய மகாமகேஸ்வரனின் மாமனாா் பாண்டியைக் காணவில்லை. உறவினா்கள் அவரைத் தேடிய நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாண்டி அசைவற்ற நிலையில் சனிக்கிழமை கிடந்துள்ளாா். அவரை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மருமகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாமனாரும் உயிரிழந்த சம்பவம் உறவினா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், மகாமகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கயிறு அவரது கழுத்தை இறுக்கியபோது ஏற்பட்ட காயத்தைப் பாா்த்த அவரது உறவினா்கள் தேவையற்ற போராட்டத்தை முன்னெடுத்தனா். போராட்டத்தின்போது பாண்டி அதிக அளவில் மது அருந்தி இருந்தாா் என்றனா்.

முன்னதாக, மகாமகேஸ்வரனின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான சிவகங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

8 போ் மீது வழக்கு: மருத்துவமனையில் பொருள்களை சேதப்படுத்தியது தொடா்பாக இஎஸ்ஐ மருத்துவமனை உள் மருத்துவா் மணிவண்ணன் அளித்த புகாரின்பேரில், பாண்டியின் தந்தை மாயாண்டி, உறவினா்கள் கேசவக்குமாா், பாலமுரளி உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.