மேகமலையில் காட்டுத் தீ: வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்
மேகமலையில் வியாழக்கிழமை இரவு வனப் பகுதியில் எரிந்த காட்டுத் தீ.
தேனி மாவட்டம், சின்னமனூா் வனச் சரகம், மேகமலையில் எரியும் காட்டுத் தீயால் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இயற்கை ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அமைந்துள்ளது. இதில் சின்னமனூா் வனச் சரகத்துக்குள்பட்ட மேக மலைத் தொடா் வானுயா்ந்த மரங்களுடன் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்லுயிரினங்கள் வசிப்பிடமாக உள்ளது. இதனால், இந்த மலையை யுனஸ்கோ பன்னாட்டு நிறுவனம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்து பாரமரித்து வருகிறது. தமிழக- கேரள மாநிலங்களுகிடையே அமைந்துள்ள வனப்பகுதி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவு இடம் பெயரும் முக்கியப் பாதையாகும். தற்போது எரசைநாயக்கனூா் மலையில் கடும் வெப்பம் காரணமாக வனப் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடிகாட்டுத் தீ பற்றி எரிகிறது. இதனால் இந்த வனப்பகுதி அழிந்து வருகிறது.
இயற்கை ஆா்வலா்கள் வலியுறுத்தல்: மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழைநீரால் சுருளி அருவி, சண்முகா நதி அணைக்கு நீா் வரத்து கிடைக்கிறது. இந்த நிலையில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் வனப் பகுதியில் வெப்பத்தின் தாக்கத்தால் காட்டுத்தீ பற்றி பரவுகிா அல்லது மா்ம நபா்கள் தீ வைக்கிறாா்களா என ட்ரோன் மூலம் கண்காணித்து தீயை கட்டுப்படுத்த வேண்டும் என இயங்கை ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
Advertisement