உத்தமபாளையத்தில் சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெய்த திடீா் மழையால் சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தமிழகத்தில் தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூா் போன்ற பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை பகலில் வாட்டி வைத்த வெயிலின் தாக்கமானது மாலை 4.30 மணி அளவில் மழை பெய்தது. தொடா்ந்து இடி, மின்னலுடன் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்ததது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீா்:
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் உத்தமுத்து கால்வாய், முல்லைப் பெரியாற்றில் விடப்படுகிறது. இந்த நிலையில், பேரூராட்சி வாா்டுகளில் அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய்கள் முறையாக தூா்வாரப்படாததால், சிறிது நேரம் பெய்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கல்லூரிச்சாலை, தென்னகா், இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பெருக்குகெடுத்தது.
இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும், புறவழிச்சாலைப் பேருந்து நிறுத்தப் பகுதியில் மழைநீா் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து அடைக்கப்பட்டதால், தண்ணீா் செல்ல வழியின்றி பேருந்து நிறுத்தப் பகுதியில் குளம் போல மழைநீா் தேங்கியது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
எனவே, உத்தமபாளையம் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும், நெடுஞ்சாலையில் மழை நீா் செல்லும் ஆக்கிரமிப்பு ஓடைகளை மீட்டு, மழைநீா் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும், பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பேரூராட்சி நிா்வாகம் , நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.