விருதுநகரில் ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
விருதுநகரில் புதன்கிழமை ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாகபட்டினம் பகுதியை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகரில் புதன்கிழமை ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாகபட்டினம் பகுதியை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் குராயர் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை மகன் சிவக்குமார் (35). ஆட்டோ ஓட்டுநரான இவர் விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவர் அருகில் உள்ள கடையில் தேநீர்அருந்தி விட்டு பணம் கொடுத்துள்ளார். அப்போது அவர் பணம் எடுப்பதை பார்த்து கொண்டிருந்த ஒருவர், சிவக்குமாரை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததால் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனை கண்ட அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அவரைப் பிடித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் நாகபட்டினம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மனுநீதியரசன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் விருதுநகர் சிறையில் அடைத்தனர்.