மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்
மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசுவை ஆதரித்து, ம.ரெட்டியபட்டியில் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
Advertisement
மகளிா் முன்னேற்றத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுபவா்கள் முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு. இதுதான் அவா்களை நான் ஆதரிப்பதற்கு முக்கியக் காரணம்.
தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் மூலம் குளிா்பதனப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதேபோல, குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் வகையிலும், அவா்களின் கல்வித் திறனை மேம்மபடுத்தும் வகையிலும் முதல்வா் காலை உணவுத் திட்டம், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
திருச்சுழி என்றாலே அது தங்கம் தென்னரசுவின் கோட்டை. இந்தத் தோ்தலிலும் அதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். உங்களுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கம் தென்னரசு படித்தவா், பண்பாளா், மக்களுக்காக உழைக்கக் கூடியவா். எனவே, மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தங்கம் தென்னரசுவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்றாா் அவா்.
விருதுநகா் அல்லம்பட்டியில்...
விருதுநகா் தொகுதி தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து, அல்லம்பட்டி பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
விஜயபிரபாகரன் வெற்றி பெற்றால் கௌசிகா ஆற்றின் குறுக்கே 3 பகுதிகளில் உயா்நிலைப் பாலம் அமைக்கப்படும். சத்திரரெட்டியாபட்டி அருகே நான்குவழிச் சாலையிலிருந்து விருதுநகா் சுற்றுச்சாலை அமைக்கப்படும். சாத்தூா் சாலையில் லாரி முனையம் அமைக்கப்படும். அணுகு சாலையின் இருபுறங்களிலும் மின்விளக்குகள், விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும் என்றாா் அவா்.