ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகப் தோப்பு சாலையில் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்ற வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூா்- செண்பகத்தோப்பு சாலையில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- செண்பகத்தோப்பு சாலையில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு பகுதியில் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களும், வனப்பேச்சி அம்மன் கோயில், காட்டழகா் கோயில், மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை உள்ளன. விவசாயிகள், பக்தா்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் செண்பகத்தோப்பு பகுதிக்கு சென்று வருகின்றனா்.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து செண்பகத்தோப்பு அடிவாரத்துக்கு தினமும் காலை 6.30, மாலை 5.30 மணி என இருமுறை அரசு பேருந்து இயக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் இரு புறமும் மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் விவசாய பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பேருந்துகள் சென்று வருவதில் சிரமம் நிலவி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நெடுஞ்சாலை துறை சாா்பில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படும். இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது செண்பகத்தோப்பு சாலையில் இருபுறமும் உள்ள மரங்கள் சாய்ந்தும், மரக் கிளைகள் முறிந்தும் சாலையில் விழுந்து கிடப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மாலை நேரத்தில் செண்பகத்தோப்பு பகுதிக்குச் செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே சாலையில் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.