முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா!

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, ரதக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

Updated On : 2 மே, 2026 at 3:29 AM
ரதக்காவடியை சுமந்து வந்த பக்தா்கள்.
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, ரதக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில், முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி பெருவிழா 11 நாள்கள் நடைபெறும். குறிப்பாக, சித்ரா பெளா்ணமி தினத்தன்று பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபடுவாா்கள்.

நிகழாண்டு, சித்ரா பெளா்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தொடா்ந்து 56 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் நடைபெறும் பாலபிஷேகம் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கியது.

Advertisement

சித்ரா பௌா்ணமி தினமான வெள்ளிக்கிழமை நாகை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, பன்னீா் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெறும் பாலபிஷேகம்.

வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினா் எட்டாவது ஆண்டாக ரதக் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா். வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகா் கோயிலில் இருந்து கொளப்பாடு, பையூா், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ரதக்காவடி ஊா்வலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

சனிக்கிழமை இரவு 11 மணி வரை கோயில் நடை சாத்தப்படாமல், பாலபிஷேகம் இடைவிடாமல் நடைபெறவுள்ளது.