ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை
காரைக்கால் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் 8 -ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
காரைக்கால் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் 8 -ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்டதாகவும், ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்ததாக விளங்குகிறது காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ள ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில். நகரின் மையப் பகுதியில், அரசு அலுவலகங்களின் சுற்றுவட்டாரத்தில் உள்ளதால், தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் பிரசித்திப் பெற்ற தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் தை மாத செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியாக 8 -ஆம் ஆண்டாக, ஏகதின லட்சார்ச்சனை உபயதாரர்கள் மூலமாக நடத்தப்பட்டது. முன்னதாக, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. 10 காலமாக இந்த லட்சார்ச்சனை நடைபெற்றது. ஒவ்வொரு கால நிறைவிலும் சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் கிளை தீபாராதனைகளை காட்டினர். வேதபாராயணம், ஆசீர்வாதம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. விழாவையொட்டி, மூலவரான ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, விநாயகரை வழிபாடு செய்தனர். ஒவ்வொரு கால நிறைவிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விவசாயம் செழிக்கவும், மக்கள் அமைதியுடன் வாழவும், பல்வேறு நலன் வேண்டி ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகருக்கு ஏகதின லட்சார்ச்சனை ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.