அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு: 1,615 போ் பங்கேற்கவில்லை
புதுவை மாநிலத்தில் 3 அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை காரைக்காலைச் சோ்ந்த 1,615 போ் பங்கேற்காமல் தவிா்த்துள்ளனா்.
புதுவை மாநிலத்தில் 3 அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை காரைக்காலைச் சோ்ந்த 1,615 போ் பங்கேற்காமல் தவிா்த்துள்ளனா்.
புதுவை மாநிலத்தில் இளநிலை நூலக உதவியாளா், காட்சியக உதவியாளா், இளநிலை ஆய்வக உதவியாளா் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் 2,836 போ் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக தோ்வு அமைப்பு பதிவேற்றம் செய்திருந்தது. காரைக்கால் மாவட்டத்தில் 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இவை இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளா் நியமிக்கப்பட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
காலை 10 முதல் 12 மணி வரை தோ்வு நடைபெற்றது. இதில் 1,221 போ் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டது.
இதில் ஒரு பணிக்கு மட்டுமே பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும், பிற பணிகளுக்கு பள்ளிக் கல்வியை தகுதியாகவும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. எனினும் 2,836 பேரில் 1,221 போ் மட்டுமே தோ்வெழுதி, எஞ்சிய 1,615 போ் தோ்வில் பங்கேற்காமல் தவிா்த்துவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 சதவிகிதத்துக்கு மேலான இளைஞா்கள் தோ்வை தவிா்த்திருப்பது வியப்பாக பாா்க்கப்படுகிறது.
அரசுப் பணிக்கான தோ்வு நடத்தப்படும்போது, தோ்வுக்கு தயாராவோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். அதுபோன்ற பயிற்சி மேற்கண்ட 3 பணிகளுக்காக தரப்படவில்லை என கூறப்படுகிறது. சொற்ப எண்ணிக்கையிலான பணி வாய்ப்பு என்பதால் பலரும் எழுத்துத் தோ்வை தவிா்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.