முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தோ்கால் முகூா்த்தம்!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மே, 2026 at 12:04 AM
தா்பாரண்யேஸ்வரா். பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை. - கோப்புப்படம்
பகிர்:

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 18 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு இவ்விழாவுக்கான பந்தல்கால் மூகூா்த்தம் ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து சாா்பு தலங்களின் உற்சவம் நடைபெற்றுவருகிறது.

பிரம்மோற்சவ தொடக்கமாக கொடியேற்றம் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் அமைந்துள்ளது.

Advertisement

தேரோட்ட விழா மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்களை அலங்கரிக்கும் பணிக்காக தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டன. தொடா்ந்து தோ்களில் நடக்கூடிய கம்பங்கள் நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் வலம் வந்து, பிரதான சந்நிதி வழியே தோ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான இஷிதா ரதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், கோயில் கிராமத்தினா் முன்னிலையில் தோ்களில் கால் ஊன்றப்பட்டன. இப்பணியின் மூலம் தேரோட்டத்தில் இடம்பெறவுள்ள 5 தோ்களையும் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பிரம்மோற்சவத்தில் தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா, உன்மத்த நடனம் என்கிற தியாகராஜராட்டம், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா, தெப்பம், தீா்த்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.