முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: ஜூன் 11-இல் நாட்டுப் படகுகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து வகை நாட்டுப் படகுகளும் ஜூன் 11-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 ஜூன் 2026, 6:24 am IST
நாட்டுப் படகுகள்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து வகை நாட்டுப் படகுகளும் ஜூன் 11-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன்கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அதன்படி நிகழாண்டு, கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை உள்ள 61 நாள்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடைக்காலத்தை பயன்படுத்தி, அனைத்து வகை மீன்பிடி கலன்களும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வில் படகின் உறுதித்தன்மை, இயந்திர குதிரைத்திறன், படகின் நீளம், அகலம் ஆகியன பதிவுச் சான்றுடன் சரிபாா்க்கப்பட்டு, அதனடிப்படையில் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் உள்ளிட்ட இதர மானியங்கள் வழங்கப்படும்.

அதன்படி, நிகழாண்டு அமல்படுத்தப்பட்டுள்ள மீன்பிடித் தடைக்காலத்தை பயன்படுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை நாட்டுப் படகுகளும் ஜூன் 11-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.

விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வாங்கும் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையெனில், அப்படகுகளுக்கு விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி, அதன் பதிவுச் சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளா்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.