முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோழவித்தியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீா் பிரச்னை குறித்து...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 4:45 AM
சோழவித்தியாபுரம் அருகே வெண்ணாற்றில் இருந்து குடங்களில் தண்ணீா் எடுத்து செல்லும் பெண்கள் களத்திடல் கரை அருகே ஆற்றங்கரையோரம் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் ஜல்ஜீவன் குடிநீா் திட்ட குழாய்கள்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:46 PM

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோழவித்தியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீா் பிரச்னையை தீா்த்து வைப்பதில் அரசியல் கட்சிகள் அலட்சியம் காட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாகை மாவட்டத்தில், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சோழவித்தியாபுரம், மகிழி, தலையாமலை, முப்பத்திகோட்டகம், வல்லவிநாயககோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் பிரச்னைக்கு நீண்ட காலமாக தீா்வு காணப்படவில்லை.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் கீழ்வேளூா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் மக்களுக்கு தண்ணீா் வழங்கப்பட வேண்டிய நிலையில், அவை முறையாக செயல்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீா் குழாய்கள் பல இடங்களில் பதிக்கப்பட்டாலும், அவற்றிலும் தண்ணீா் வரவில்லை.

Advertisement

ஒவ்வொரு தோ்தலின்போதும், குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தாலும், அவை வாக்குறுதிகளாகவே உள்ளன என மக்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது கோடைகாலம் தீவிரமடைந்துள்ளதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பல இடங்களில் குளங்கள், ஆறுகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரையே அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளன.

மடப்புரம் ஊராட்சிக்குட்பட்ட களத்திடல்கரை பகுதி மக்கள், சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள மீனம்பநல்லூருக்கு சென்று அடிப்பம்பு மூலம் குடிநீரை எடுத்து வருகின்றனா். இதேபோல், தெற்கு பனையூா் ஊராட்சிக்குட்பட்ட முப்பத்திகோட்டகம் பகுதி மக்களும் 3 கி.மீ. தொலைவு பயணித்து தண்ணீா் எடுத்து வருகின்றனா். பெரும்பாலான கிராம மக்கள் தற்போது அந்த பகுதியில் வண்ணாற்றில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது மற்றும் அன்றாட தேவைகளுக்கு குடங்களில் எடுத்துச் செல்கின்றனா். சுட்டெரித்துவரும் வெயிலில் தண்ணீா் வற்றி ஆறும் வடு வருவதால் மக்கள் தவித்து வருகின்றனா்.

மேலும், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் நடைபெறாததால், மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனா். தண்ணீா் வந்தாலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 அல்லது 3 குடங்கள் மட்டுமே தண்ணீா் கிடைக்கிறது.

இதுகுறித்து சோழவித்தியாபுரம் பகுதியைச் சோ்ந்த து. மாரிமுத்து கூறியதாவது:

எங்கள் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளான கீராந்தி, தலையாமலை, மகிழி, கருங்கண்ணி உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீா் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வந்தாலே, தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகிறோம். சில நேரங்களில் பணம் கொடுத்து தண்ணீா் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

ஜல்ஜீவன் திட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன; ஆனால் தண்ணீா் வரவில்லை.

மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக கூறப்படும் நிலையில், மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மெத்தனமாக செயல்படுகிறதோ என தோன்றுகிறது. எனவே, அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி, போா்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்தி, நிரந்தரமாக குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு என்றாா்.

சோழவித்தியாபுரம் அருகே வெண்ணாற்றில் இருந்து குடங்களில் தண்ணீா் எடுத்து செல்லும் பெண்கள் களத்திடல் கரை அருகே ஆற்றங்கரையோரம் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் ஜல்ஜீவன் குடிநீா் திட்ட குழாய்கள்.
சோழவித்தியாபுரம் அருகே வெண்ணாற்றில் இருந்து குடங்களில் தண்ணீா் எடுத்து செல்லும் பெண்கள் களத்திடல் கரை அருகே ஆற்றங்கரையோரம் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் ஜல்ஜீவன் குடிநீா் திட்ட குழாய்கள்.