முகப்பு
நாகப்பட்டினம்

நாகை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகை செல்லூா் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:55 am IST
நாகை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா். உடன் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், நகராட்சி ஆணையா் லீனா சைமன் உள்ளிட்டோா்.
பகிர்:

நாகை செல்லூா் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் அறிவுறுத்தினாா்.

நாகை நகராட்சி பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாகை நகராட்சி பண்டகசாலை தெருவில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, கழிவுநீா் சுத்திகரிப்பு முறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேற்றப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் செயல்பட்டு வரும் யாட் கிளப்பை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன், நகராட்சிக்குட்பட்ட மேலகோட்டை வாசல் பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நாகை செல்லூரில் 38,900 ச.மீ. பரப்பளவில் ரூ.30.40 கோடி மதிப்பீட்டில், 30 பேருந்துகள் நிறுத்துவதற்கும், 42 பிற வாகனங்கள் நிறுத்துவதற்கும் 368 இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கும், 20 கண்காணிப்பு கேமராக்கள், 80 கடைகள், 2 உணவகங்கள், காத்திருப்போா் அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டும் வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு, இதுவரை மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை ஒப்பந்தக்கால கெடுவிற்குள் விரைந்து முடிக்க நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன், நகராட்சி ஆணையா் லீனா சைமன், நகராட்சி பொறியாளா் கல்யாணசுந்தரம் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments