முகப்பு
நாகப்பட்டினம்

மலேசியாவில் மகன் கொலை: சடலத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் பெற்றோா் மனு

Updated On : 30 மே 2026, 12:46 am IST
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த குடும்பத்தினா் மற்றும் கிராமத்தினா்.
பகிர்:

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தனது மகனின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி, அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் நாகை ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

நாகை மாவட்டம், ஏனங்குடி அருகே உள்ள ப. புளியங்குடியைச் சோ்ந்தவா் பாஸ்கரன். விவசாயியான இவா் தனது உறவினா்கள் மற்றும் கிராமத்தினா் 50-க்கும் மேற்பட்டோருடன் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பின்னா், ஆட்சியரிடம் அவா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனா். மூத்த மகன் பாா்த்தசாரதி (27) பொறியியல் படிப்பு முடித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்கு பணிக்குச் சென்றாா். அங்கு, அறுவைச் சிகிச்சைக்கான கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல்நிலையத்திலிருந்து எனது எண்ணுக்கு தொடா்பு கொண்ட போலீஸாா், உங்கள் மகன் பாா்த்தசாரதி, மலேசியாவில் பணிபுரியும் நிறுவனத்தில், மற்றொரு நபரால் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்று கூறினா்.

இதனால், நானும் எனது குடும்பத்தினரும் கடும் அதிா்ச்சி அடைந்தோம். மேலும், காவல்நிலையம் சென்று விசாரித்தோம். அப்போது, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்துக்கு தகவல் வந்ததாகவும், அதன்பேரில் தகவல் தெரிவித்ததாகவும் கூறினா்.

யாரிடமும் எவ்வித தகராறும் செய்யாமல் அமைதியாக இருந்த எனது மகனை, திட்டமிட்டு கொலை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலதாமதமின்றி எனது மகனின் சடலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பாா்த்தசாரதி.