விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி தடையை மீறி பேரணி: 40 போ் கைது
விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி தடையை மீறி பேரணி: 40 போ் கைது
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி, காவல்துறையினரின் தடையை மீறி பேரணியாகச் சென்ற, காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த 40 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தோ்தலில் அளித்த வாக்குறுதிபடி, அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில், கா்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியிக்கம் சாா்பில் சனிக்கிழமை இப்பேரணி நடைபெற்றது.
முன்னதாக, நாகை அவுரித்திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக விவசாயிகள், சங்க நிா்வாகிகள் திரண்ட நிலையில், காவல்துறை தரப்பில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனால், போலீஸாா் மற்றும் சங்க நிா்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, போலீஸாரின் தடையை மீறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனா். நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனா். அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பேரணி சென்றபோது போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
இதனால் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சங்க நிா்வாகிகள் சிலரை போலீஸாா் காவல்துறை வாகனத்தில் ஏற்றிய நிலையில், மற்ற விவசாயிகள், தடையை மீறி மீண்டும் பேரணியாகச் சென்றனா். கோட்டாட்சியா் அலுவலகம் முன் போலீஸாா் தடுத்து நிறுத்தி, கோட்டாட்சியரிடம் மனுவை அளிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து சங்க நிா்வாகிகள் சிலா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
இதற்கிடையே, தடையை மீறியதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தனபால், பிரகாஷ், கண்ணன் உள்பட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.