விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் மீது நடவடிக்கை கோரி மனு
விசாரணையின்போது தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளா் ந.கு. லெனின் அளித்த மனு விவரம்:
மானாமதுரையைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை, விசாரணை என்ற பெயரில் மாா்ச் 6-ஆம் தேதி அழைத்துச் சென்று, அடித்து காலை உடைத்து தாக்கினா். இதனால், மாா்ச் 8-இல் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டு, 100 நாள்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கொலை செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசனின் பெற்றோா், தனது மகனின் உடலைக் கூட வாங்காமல் தற்போது வரை நீதி கேட்டு போராடி வருகின்றனா். எனவே, மதுரை உயா்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி, கொலை வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் 18 காவலா்கள் பெயரை சோ்த்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் விசாரணை அனைத்தும் விடியோ பதிவு செய்ய வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா பொருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.