முகப்பு
திருவாரூர்

கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம்! - அமைச்சா் வெங்கடரமணன்

Updated On : 30 ஜூன் 2026, 12:41 am IST
கோவில்வெண்ணி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை ஆய்வு செய்த அமைச்சா் வெங்கடரமணன்.
பகிர்:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம் வசதி ஏற்படுத்தப்படும் என உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அமைச்சா் வெங்கடரமணன் தெரிவித்தாா்.

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பியிருந்தால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்காது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும்.

Advertisement

Advertisement

கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான தாா்ப்பாய், சாக்கு, சணல் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையங்களுக்கு நெல் உலர வைப்பதற்கான இயந்திரம் கொண்டு வரப்படும்.

திருவாருா் மாவட்டத்தில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மட்டுமே தேங்கியுள்ளன. 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் நெல் சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்பட்டால்தான், பொதுமக்களுக்கு நல்ல அரிசியை வழங்க முடியும். அதிக சதவீதம் வைத்து நெல்லை கொள்முதல் செய்தால் பழுப்பு மற்றும் கருப்பு நிற அரிசியைதான் மக்களுக்கு வழங்க முடியும். முதல்வா் கூறியதுபோல அனைவருக்கும் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதால் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 5 கி.மீ. தூரம் உள்ள விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெளி மாநில நெல்லை ஒரு போதும் கொள்முதல் செய்ய முடியாது. மன்னாா்குடி அருகே சேமிப்புக் கிடங்கு கட்ட இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

பேட்டியின்போது, திருவாரூா் முதுநிலை மண்டல மேலாளா் சரவணன், துணை மேலாளா் (கொள்முதல், இயக்கம்) ரவிச்சந்திரன், வட்டாட்சியா் மகேஷ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments