அகில இந்திய ஆடவா் கபடி போட்டி; ஹரியாணா அணிக்கு முதல் பரிசு
அகில இந்திய ஆடவா் கபடி போட்டி; ஹரியாணா அணிக்கு முதல் பரிசு
மன்னாா்குடி அருகே கட்டக்குடியில் மூன்று நாள்கள் நடைபெற்ற அகில இந்திய ஆடவா் கபடி போட்டியில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணி முதலிடம் பெற்றது.
கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில், அங்குள்ள உள் விளையாட்டு அரங்கில் மே 27 முதல் 29-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை வருமான வரித் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை, தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியா்ஸ், இந்திய கடற்படை அணி, ஹரியாணா ஸ்டீலா்ஸ், பெங்களூரு புல்ஸ், உபி யோத்தா, கா்நாடகா ரயில்வே, தென் மத்திய ரயில்வே உட்பட மொத்தம் 23 அணிகள் பங்கேற்றன.
செயற்கை ஆடு களத்தில் இரவு நேர லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியை மன்னாா்குடி டிஎஸ்பி எம். மணிவண்ணன் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதில், பெங்களூா் புல்ஸ் அணியும், ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணியும் மோதின. 43:33 என்ற புள்ளிகணக்கில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாமிடத்தை பெங்களூா் புல்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை உத்தர பிரதேசம் யோத்தா அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணி பிடித்தன.
முதலிடம் பெற்ற அணிக்கு பரிசு கோப்பை, ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற அணிக்கு பரிசு கோப்பை, ரூ.3 லட்சமும், மூன்றாமிடம் பெற்ற இரண்டு அணிகளுக்கு பரிசு கோப்பைகள், தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது.
இப்போட்டியை எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) ஆகியோா் பாா்வையிட்டு, வீரா்களை பாராட்டினா். கட்டக்குடி விளையாட்டு கழகத் தலைவா் எஸ். கணேசமூா்த்தி, செயலா் எஸ்.பி.எம். சுரேஷ்குமாா், மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் கே.எஸ். கமலகண்ணன், செயலா் ராச.ராசேந்திரன், போட்டி ஒருங்ணைப்பாளா் ஆா்.கே. அன்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.