செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை சம்பவம்: மேலும் இருவா் கைது
குடவாசல் அருகே சேங்காலிபுரத்தில் செங்கல் சூளை மேற்பாா்வையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சேங்காலிபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் திருமுகம் (48). செங்கல் சூளை மேற்பாா்வையாளரான இவா், முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொலை செய்யப்பட்ட திருமுகத்தின் உறவினா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்யக்கோரி சனிக்கிழமை காலை திருவாரூா் கும்பகோணம் நெடுஞ்சாலையில் புதுக்குடி கடைத் தெருவில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடா்புடையதாக, நான்கு போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருவாரூா் நகரப் பகுதியைச் சோ்ந்த சிறுவன், கண்ணன் (40) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.