முகப்பு
புதுதில்லி

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது: டி.கே.ரங்கராஜன்

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.

Updated On : 24 ஜூலை 2018, 12:25 am IST
பகிர்:

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.
மாநிலங்களவையில், "மோட் டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா 2017' மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டி.கே. ரங்கராஜன் எம்.பி. பங்கேற்றுப் பேசியதாவது:
இந்த மசோவை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர், நடத்துனரை  மட்டுமே பொறுப்பாக்க முடியாது. விபத்துக்கு சாலைகளின் நிலைமை, அதிகமான நெரிசல், வாகனங்கள் பெருக்கம் ஆகிய காரணிகளும் உள்ளன. அவற்றைத் தீர்க்க இந்த மசோதாவில் ஏதும் கூறப்படவில்லை.  நம்மால் ரயில் விபத்துகளைத் தடுக்க முடியவில்லை. ஆனால், சாலை விபத்துகளைத் தடுக்க விரும்புகிறோம்?  இது உண்மையிலேயே ஒரு நகைச்சுவைதான்.
தனியார்மயம் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் வாகனப் பதிவுக்கான உரிமை,  ஆய்வு,  எளிமைப்படுத்துவதாக கூறப்படும் விஷயங்கள்,  ஒற்றைச் சாளர முறை எல்லாம்  மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அ ரசை அதிகாரமில்லாமல் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. மேலும், இந்த மசோதாவில்  மாநில அரசுக்கான அதிகாரம்,  கிராம ஊராட்சியின் அதிகாரம் போன்று உள்ளது. இதனால்,  கிராமப் பஞ்சாயத்து தலைவருக்கு என்ன அதிகாரம் இருக்குமோ அந்த அதிகாரம்தான் மாநில அரசுக்கும் இருக்கும் நிலை ஏற்படும்.
தமிழகம், கேரள மாநில மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.  மூத்த குடிமக்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.  தமிழகத்திலும், கேரளத்திலும் பொருளாதாரம் வளர்ந்து வருவதற்குக் காரணம், சாலைப் போக்குவரத்து கிராமங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால்தான்.  தனியாராக இருந்தால் கிராமங்களுக்கு செல்லமாட்டார்கள்.  தனியார் என்பதே லாபத்தை நோக்கிச் செல்பவர்கள் என்பதுதான் அர்த்தம். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சிலர் கூறுகின்றனர்.  
இயல்பாகவே அது நஷ்டத்தில்தான் இயங்கிவருகிறது.  காரணம், அது சேவைத் துறையாகும். அரசு தலைமை மருத்துவமனை,  காவல் நிலையம்,  நீதித் துறை, நீதிமன்றங்கள் எல்லாம் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.  
அதற்காக அவற்றை தனியார்யமாக்கலாமா? அரசுப் போக்குவரத்து அமைப்புகளை  நிலைகுலையச் செய்துவிடும் என்பதற்காக மட்டும் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை.  தனியார் துறையில் 2-5 பேருந்துகள் வைத்திருக்கும் சிறிய, நடுத்தர போக்குவரத்து செயல்பாட்டாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்துவிடும். 
இந்த மசோதா மாநில அரசுகளுக்கு குறைந்த அதிகாரம் அளிப்பதாக உள்ளது. மேலும்,  இந்த மசோதாவால் மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கப்படும். இது மாநிலத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்றார் அவர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments