ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலம் நீட்டிப்பு
தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.
தில்லி மகளிர் ஆணையத் தலைவியாக ஸ்வாதி மாலிவால் 2015 ஜூலை 27 ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தில்லி முதல்வர் கேஜரிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் கேஜரிவால் வெளியிட்ட பதிவில், "தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவரின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
கேஜரிவாலின் முடிவுக்கு ஸ்வாதி மாலிவால் நன்றி தெரிவித்துள்ளார். கேஜரிவாலின் சுட்டுரைப் பதிவைச் சுட்டிக் காட்டி, ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில்,"உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. தில்லி பெண்களின் பாதுகாப்பு, கௌரவத்தை பாதுகாக்க கடந்த பதவிக்காலத்தை விட இந்த பதவிக்காலத்தில் இரு மடங்கு உழைப்பேன்' என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்ப்பு: ஸ்வாதி மாலிவாலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு சம்பூர்ணா தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளரும் ரோகிணி வார்டு கவுன்சிலருமான ஷோபா விஜேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த பதவிக் காலத்தில் ஸ்வாதி மாலிவால் விளம்பர வெறி கொண்டு அலைந்தாரே தவிர, பெண்கள் நலனுக்காக ஆக்கபூர்வமாக எதையும் அவர் செய்யவில்லை. இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலுக்கு எந்த அடிப்படையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.