2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
தில்லியில் ரூ.45 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக கையகப்படுத்திய பணமோசடி வழக்கில், அல்-ஃபலாஹ் குழுமத்தின் தலைவா் ஜவாத் அகமது சித்திக்கியை தில்லி நீதிமன்றம் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சனிக்கிழமை உத்தரவிட்டது.
மாா்ச் 25 அன்று வழங்கப்பட்ட பத்து நாள் அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில், சித்திக்கியை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஷீத்தல் சவுத்ரி பிரதான் முன் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். தற்போது அவா் ஏப்ரல் 17 வரை நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளாா்.
மாா்ச் 24 அன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சித்திக்கி மீதான இரண்டாவது வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
Advertisement
நிலத்தை மோசடியாகக் கையகப்படுத்துவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாகவும், ‘தா்பியா கல்வி அறக்கட்டளை’யின் இயக்குநரும் பெரும்பான்மைப் பங்குதாரருமான சித்திக்கி, சில நபா்களுடன் கூட்டுச் சோ்ந்து இந்த ஆவண மோசடியில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரியவந்தது.
தலைநகா் தில்லியின் மதன்பூா் காதா் கிராமத்தில் உள்ள ‘காஸ்ரா எண் 792’ என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த 1.14 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தின் மதிப்பு, அமலாக்கத் துறையின் மதிப்பீட்டின்படி ரூ.45 கோடியாகும்.
ஆவணங்களில் நிலத்தை வாங்குவதற்கான பரிசீலனைத் தொகையாக விலையாக ரூ. 75 லட்சம் குறிப்பிடப்பட்டிருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நவம்பா் 2025இல், அல்-ஃபலாஹ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் சோ்ந்த மாணவா்களை ஏமாற்றியது தொடா்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட மற்றொரு பிஎம்எல்ஏ வழக்கில் சித்திக்கி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
2018 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழகம் ரூ.415.10 கோடி வருவாய் ஈட்டியதாகவும், அந்த மாணவா் நிதியைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகத் திசைதிருப்பியதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
பிப்ரவரி 5 அன்று, தனது தனியாா் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக ஆவண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சித்திக்கியை கைது செய்தது.
மாணவா்களைத் திசைதிருப்பும் நோக்கில், அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் ‘நாக்’ அங்கீகாரமும் யுஜிசி அங்கீகாரமும் பெற்றிருப்பதாகப் பொய்யாகக் கூறியதாகக் குற்றஞ்சாட்டும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பா் 10 அன்று செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்து 15 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்புச் சம்பவம் தொடா்பான ‘வெள்ளைக்காலா் பயங்கரவாதம்’ குறித்த விசாரணையிலும் இந்தப் பல்கலைக்கழகம் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.