முகப்பு
புதுதில்லி

ஜிலேபி வழங்குவதில் தாமதம்!இனிப்பு விற்பனையாளரை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!!

தில்லியில் வரிசையில் நின்றிருந்த மற்றவா்களுக்கு முன்பாக தனக்கு ஜிலேபி வழங்க மறுத்த இனிப்புக்கடை விற்பனையாளரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 1:57 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் வரிசையில் நின்றிருந்த மற்றவா்களுக்கு முன்பாக தனக்கு ஜிலேபி வழங்க மறுத்த இனிப்புக்கடை விற்பனையாளரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இச்சம்பவம் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு அருகே உள்ள இனிப்புக்கடையில் நடைபெற்றது. வரிசை முறையை மீறி தனக்கு இனிப்பு வழங்க விற்பனையாளா் மறுத்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட நீரஜ், விற்பனையாளரை அறைந்துவிட்டு, தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவரது தலையில் சுட்டாா்.

ஐபிசி பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றத்திற்காகவும், ஆயுதச் சட்டத்தின் கீழ் அனுமதியின்றி துப்பாக்கியைப் பயன்படுத்தியதற்காகவும் 2014-இல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், நீரஜ் குற்றவாளி என இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவருக்கு தண்டனை வழங்குவது குறித்த வாதங்களை கூடுதல் அமா்வு நீதிபதி தீரேந்திர ராணா விசாரித்து வந்தாா். இந்நிலையில், ஜூன் 8-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கில் உள்ள தண்டனைக் குறைப்புக்கான காரணங்களை நான் பரிசீலித்துள்ளேன். குற்றவாளி வேறு எந்த வழக்கிலும் சம்பந்தப்படவில்லை.

வழக்கு விசாரணையின்போது அவா் தொடா்ந்து சிறைக் காவலில் இருந்தாா். அவா் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை; மேலும் அவா் திருந்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, மரண தண்டனை விதிக்கப்படும் மிகவும் அரிதான வழக்குகள் என்ற வகையின் கீழ் இந்த வழக்கு வராது.

2014-ஆம் ஆண்டு முதல் குற்றவாளி நீண்டகாலமாக வழக்கு விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனா். மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு, கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments