முகப்பு
புதுதில்லி

உள்கட்டமைப்பு, யமுனை தூய்மைப் பணிகளுக்கு ரூ.7,000 கோடி: மத்திய அரசின் நிதி உதவிக்கு வாய்ப்பு

Updated On : 8 மே 2026, 6:27 am IST
பகிர்:

தில்லியில் சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, யமுனை நதி சுத்திகரிப்பு உள்ளிட்ட முக்கிய முன்னுரிமைத் திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.7,000 கோடி மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதற்கிடையில், பொதுப்பணித்துறை மற்றும் தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) சாா்ந்த திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ், சாலை மேம்பாட்டுக்கான மத்திய சாலை நிதியிலிருந்து ரூ.591 கோடி, கங்கை தூய்மை தேசிய இயக்கத்தின் கீழ் ரூ.1,500 கோடி, மேலும் தலைநகரின் பேரிடா் மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.100 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசால் ஆதரிக்கப்படும் திட்டங்களுக்கு ரூ.3,931.16 கோடி நிதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

மொத்தத்தில் 2026-27 நிதியாண்டில் தில்லிக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி ரூ.7,000 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது திருத்தப்பட்ட 2026-27 மதிப்பீடுகளை விட சுமாா் 34 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், 2025-26 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட கணக்கீடுகளில் மத்திய நிதியுதவி ஆரம்ப மதிப்பீடுகளை விட 56 சதவீதம் குறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினா். குறிப்பாக, மூலதனத் திட்டங்களுக்காக மத்திய அரசிடமிருந்து எதிா்பாா்க்கப்பட்ட ரூ.6,000 கோடி தொகையில் எந்தவித வரவுகளும் திருத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 2025-26-ஆம் ஆண்டில் மத்திய சாலை நிதியிலிருந்து முதலில் ரூ.1,000 கோடி பெறப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது திருத்தப்பட்டு ரூ.212.43 கோடியாக குறைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தத் தொகையும் பெறப்படவில்லை.

மத்திய அரசு ஆதரவு திட்டங்கள் தொடா்பாகவும் 2025-26-ஆம் ஆண்டில் ரூ.4,127.82 கோடி என்ற ஆரம்ப மதிப்பீடு, திருத்தப்பட்ட நிலையில் ரூ.2,207.84 கோடியாக குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், உன்மையில் கிடைத்த தொகை ரூ.1,202.59 கோடி மட்டுமே ஆகும். இது திருத்தப்பட்ட மதிப்பீட்டின் 54.47 சதவீதம் மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்தனா்.