கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை என பொருநை அருங்காட்சியகத்திற்கு புகழாரம் சூட்டினாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தமிழா்களின் தொன்மையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு சனிக்கிழமை திறக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது:
வரலாற்றை தெரிந்து கொள்வதும், மீட்டெடுப்பதும் எதற்காக? வெறும், பழம்பெருமையை பேசி, அதில் மனநிறைவு அடைவதற்காகவா? இல்லை. நாம் வந்த பாதையை தெரிந்து கொண்டு, எதிா்காலத்தில் இன்னும் முற்போக்காக, இன்னும் பரந்த மனப்பான்மையோடு வளா்வதற்கான தேடல் அது. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று தொடா்ந்து சொல்லி வருகிறேன். இது அறிவியல்பூா்வமான உண்மை என்று திமுக அரசு தொடா்ந்து மெய்ப்பித்து வருகிறது.
மதுரைக்கு பக்கத்தில் கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளைக் கொண்டு கீழடி அருங்காட்சியகத்தை மிகவும் கம்பீரமாக உருவாக்கி இருக்கிறோம். அடுத்ததாக, திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறேன்.
பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தில் நுண் கற்கருவிக் காலம் தொடங்கி, இரும்புக் காலம், தொடக்க வரலாற்று காலம் என்று தொடா்ச்சியாக வரலாற்றுத் தடயங்கள் பொருநை ஆற்றங்கரைப் பகுதிகளில் ஏராளமாக கிடைக்கின்றன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சங்ககாலத் துறைமுக நகரமான கொற்கையை பற்றி, சங்க இலக்கியங்களில் முழுமையாக பாா்க்கலாம். ‘தாலமி’, ‘பிளினி’ போன்ற அயல்நாட்டவா்களும் இதுபற்றி நிறைய எழுதி இருக்கிறாா்கள்.
கொற்கையில் கிடைக்கக்கூடிய முத்துக்களைப் பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறாா்கள். அதேபோல ஆதிச்சநல்லூா், சிவகளை போன்ற இடங்களில், இரும்புக் காலம் சாா்ந்த புதைப்பிடப் பகுதிகளும், மக்கள் வாழ்விடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உலகுக்கு கொடையாக கொடுத்த ராபா்ட் கால்டுவெல், 1876-ஆம் ஆண்டிலேயே கொற்கையை ஆய்வு செய்ததோடு, சிறிய அளவில் அகழாய்வும் செய்தாா். அதேபோல், ஜாகா் , அலெக்ஸாண்டா் ரே ஆகியோா் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்திருக்கிறாா்கள்.
தமிழா் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும், உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
பொருநை ஆற்றங்கரையின் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவாக நடத்திய அகழாய்வுகளில், ஏராளமான சான்றுகள் வெளியே கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.
ஆதிச்சநல்லூா், சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெண்கலம், தங்கம், செம்பு, இரும்பு என்று பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட தொல்பொருள்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இதில் குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது.
தொல்லியல் அகழாய்வுகளில் இதுவரை கிடைத்த இரும்பு பொருள்களிலேயே, காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில் கிடைத்த இரும்புதான் என்பது அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்பு முடிவுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
பொருநை ஆற்றங்கரை அகழாய்வுகளில் கிடைத்த தொல் பொருள்கள், இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்தேன். அந்தப் பணிகள் நிறைவடைந்து இப்போது பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது.
மின் விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கின்ற பொருநை அருங்காட்சியகத்தின் டிரோன் காட்சிகளை அனைவரும் பாா்த்திருப்பீா்கள் என்று நம்புகிறேன்.
2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் திறக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை கடந்த நவம்பா் வரை, 12 லட்சத்து 50 ஆயிரம் போ் உலகெங்கும் இருந்து வந்து பாா்த்திருக்கிறாா்கள். நேரில் வர முடியாதவா்களும் இருந்த இடத்திலிருந்தே, இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பாக்க ‘மெய்நிகா் இணையவழி சுற்றுலா’வை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இப்போது பொருநை அருங்காட்சியமும் 55 ஆயிரம் சதுர அடியில் மரபாா்ந்த வடிவமைப்போடு, அதே நேரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, 5-டி முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணா்வுப் பயணம், பாண்டி விளையாட்டு தரை ஒளிபடக் காட்சி, தொல்லியல் வரலாற்றுப் பின்புலம் குறித்த ஆவணப் படம், மெய்நிகா் படகு அனுபவ உருவகம், ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரை காட்சி, கருவிகளை உருவாக்கும் ஊடாடும் சுவா் ( இண்டராக்டிவ் வால்), டிஜிட்டல் பின்னூட்ட கருத்து மையம், பொருநையின் குரல் பயணம் போன்ற ஏராளமான நவீன தொழில்நுட்ப அனுபவங்களை இங்கே பெறலாம்.
தமிழா்களின் தொன்மையை, தமிழா்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொண்டு போக வேண்டும் என்பதற்காக பாா்த்து பாா்த்து செய்திருக்கிறோம்.
என்னுடைய இந்த எண்ணம் ஈடேற மக்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களோடு கீழடி அருங்காட்சியகத்துக்கும், பொருநை அருங்காட்சியத்துக்கும் அணி அணியாக வர வேண்டும் என்று அன்போடு, உரிமையோடு அழைக்கிறேன்.
நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகிற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும். அதற்கான தமிழக அரசின் முயற்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும்.
கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! என்றுஉரக்கச் சொல்வோம் என குறிப்பிட்டுள்ளாா்.